பொள்ளாச்சியில் 'காவலன்' படம் பார்க்க வந்த விஜய்க்கு அதிமுகவினர் திரளாக வந்து வரவேற்பு கொடுத்தனர். நடிகர் விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' படப்பிடிப்பு கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் பொள்ளாச்சி வந்த நடிகர் விஜய், தனது 'காவலன்' படம் திரையிடப்பட்டுள்ள துரைஸ் தியேட்டருக்கு வந்தார். அவரை தியேட்டர் உரிமையாளரும், பொள்ளாச்சி வர்த்தக சபை தலைவருமான ஜி.டி. பாலகிருஷ்ணன் மலர் கொடுத்து வரவேற்றார். பின்னர் தியேட்டருக்குள் சென்று ரசிகர் முன் தோன்றினார் விஜய். பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். நிறைய ரசிகர்கள் விஜய்யுடன் கைகுலுக்க முண்டியடித்தனர். விசில் அடித்து துள்ளி குதித்தனர். அவர்களிடம் 'காவலன்' படம் பற்றி விஜய் கேட்டார். படத்தில் குத்துபாட்டு இல்லையே என்று சிலர் குறைபட்ட போது, அடுத்தபடம் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் என்றார். விஜய் பேசுகையில், "நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங்ணா... சொல்லுங்ணா... என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற ஊர்களில் படப்பிடிப்பின் போது கூட்டத்துக்காக ஜூனியர் நடிகர்களை பயன்படுத்துவோம். ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் தான் அந்த ஊர்மக்கள் ஜூனியர் நடிகர்களாக நடிப்பார்கள். பொள்ளாச்சி மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்", என்றார். நிகழ்ச்சியில் விஜய் நற்பணி மன்ற பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ரசிகர்களை விட பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அ.தி.மு.க.வினர்தான் விழாவில் அதிகம் பங்கேற்றனர். அதிமுக கொடியுடன் வந்து அவர்கள் வரவேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணாடிமணி, அருணாசலம், ஊஞ்சவேலாம்பட்டி தலைவர் முருகானந்தம் ஆகியோர் விஜய்யைச் சந்தித்து சால்வை அணிவித்தனர். அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் விஜய்.
No comments:
Post a Comment